எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் நோய் உங்களை நெருங்காது! சொல்கிறார்கள் கோவை டாக்டர்கள்!

எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தால் நோய் உங்களை நெருங்காது! சொல்கிறார்கள் கோவை டாக்டர்கள்

மனிதர்களில், கடவுளாக பார்க்கக் கூடியவர்கள் டாக்டர்கள் தான். அந்த டாக்டர்களை போற்றும் விதமாக, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி டாக்டர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் டாக்டர் பிதான் சந்திர ராயின் பிறந்த நாளான ஜூலை, 1ம் தேதி இந்திய அரசால் டாக்டர் தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த தினத்தில், கோவை டாக்டர்கள் சிலரிடம் பேசினோம்…!

‘மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’

‘வரும் முன் காப்போம்’ என்பதை போல வியாதிகள் வரும் முன் தடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் நோய்களின் தன்மைகளை அறிந்து உரிய டாக்டர்களை சந்தித்து, சரியான சிகிச்சையை பெற வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வந்து எது சரி, எது தவறு என்பதை உணர்ந்து, சமூக பொறுப்புடன் மக்கள் இருக்க வேண்டும். அனைத்து வியாதிகளையும், டாக்டர்களால் குணப்படுத்த முடியாது. அதற்கேற்ப, மக்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

– டாக்டர் நிர்மலா

டீன், கோவை அரசு மருத்துவமனை.

‘தைரியம் அளிக்கிறோம்’

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நோக்கில் மருத்துவம் படித்து டாக்டராகிறோம். தினமும் பல நோயாளிகள், ரத்தம், துன்பங்கள், கஷ்டங்களை பார்க்கிறோம். ஆனால் அதை கண்டு ஒருபோதும் துவண்டு விடுவது இல்லை. அவர்களுக்கு நம்பிக்கையூட்டி தைரியம் அளிக்கிறோம். டாக்டர் என்பதால், அனைத்து குடும்ப நிகழ்வுகளுக்கும் போக முடியாது. அப்போது அவர்கள் கர்வத்தில் வரவில்லை என நினைப்பார்கள். அதை நினைத்து வருத்தப்படக் கூடாது.

– டாக்டர் பாலசுப்பிரமணி

கோவை அரசு மருத்துவமனை.

‘புரிதல் குறைந்து விட்டது’

இந்த வருடத்திற்கான மருத்துவர் தின கருப்பொருள், ‘ஹீலிங் ஹேண்ட், கேரிங் ஹார்ட்’ என்பதாகும். தற்போது உள்ள காலகட்டத்தில் டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே புரிதல் குறைந்து விட்டது. சமூக வலைதளங்களையே, மக்கள் முழுமையாக நம்பி உள்ளனர். டாக்டர்கள் ஒரு நோய்க்கு, மருந்து கொடுத்து மெல்ல மெல்லதான் குணப்படுத்த முடியும். ஆனால் நோயாளிகள் பலர், டாக்டர்கள் உடனே நோயை குணப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் குடும்ப டாக்டர்கள் இருந்தார்கள். ஏதாவது உடல் நல பிரச்னை என்றால் அவர்களிடம் கலந்து ஆலோசித்து நிம்மதியாக இருந்தார்கள். இன்று குடும்ப டாக்டர் போய், கூகுள் டாக்டர் வந்து விட்டார். இதனால் தேவை இல்லாத பணம், நேரம், கால விரயம், மன அழுத்தம்தான் ஏற்படுகிறது. நம்பகத்தன்மையும் இருப்பதில்லை.

– டாக்டர் மோனி

மனநல மருத்துவர்.

‘நோய் வரும் முன்காப்பவரே டாக்டர்’
தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, கே.ஜி.மருத்துவமனை சேர்மன் டாக்டர் பக்தவத்சலம் கூறியதாவது:அன்பாக இருந்தால் மட்டுமே சிறந்த டாக்டராக இருக்க முடியும். பிறர் மீது பரிவு, பரிசுத்தமாக இருந்தால் மட்டுமே அவர் சிறந்த டாக்டர். டாக்டர்களை கடவுளாக நினைக்கின்றனர். அதற்கேற்ப அவர் நடக்க வேண்டும். தவறுபவர் மருத்துவ வியாபாரிதான். மாதா, பிதா, குரு, டாக்டர், தெய்வம் என்றே இருக்க வேண்டும். நோய் வரும் முன் காப்பவரே டாக்டர்.நோயை விரட்ட, நுாறு கிலோ எடை இருக்க கூடாது. ரத்த சர்க்கரை, ரத்தக் கொழுப்பு, ரத்த அழுத்தம், ஆகியவை, 100 என்ற அளவில் இருக்க வேண்டும். நுாறு சதவீதம் புகை, மது அருந்துதல் கூடாது. எண்ணெய் உள்ள உணவு உட்கொண்டால், மாரடைப்பு ஏற்படும். நுாறு சதவீதம், மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுக்கு, மாரடைப்பு ஏற்படாது. மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும். தினமும், மூன்று கி.மீ., என மாதம் 100 கி.மீ., நடக்க வேண்டும். சைவமாக இருக்க வேண்டும்.இதை பின்பற்றினால் நலமுடன் வாழலாம்.இவ்வாறு, டாக்டர் பக்தவத்சலம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்