திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்-2023 இன்று தொடங்கியது.
திருச்சியில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்-2023 இன்று தொடங்கியது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள்-2023 இன்று தொடங்கியது.
இப்போட்டிகளை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் காமினி உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டு ரசித்தனர்.
இப்போட்டிகளில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஒடிசா, குஜராத், ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 26 மாநிலங்களைச் சேர்ந்த, 436 அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.
ஒரு அணியில் ஆடவர் பிரிவில் 6 பேரும், மகளிர் பிரிவில் 6 பேரும் பங்கேற்று தங்களது விளையாட்டு திறனை வெளிப்படுத்தினார்கள்.
இம்முறை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சொந்த மண்ணான தமிழ்நாட்டில் நடைபெறுவதால் அனைத்து விளையாட்டு பிரிவுகளிலும் தமிழக வீரர்கள் வெற்றிக்கான நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர்.
மல்லர் கம்பம் விளையாட்டில், அணிகள் பிரிவு, தனிநபர் பிரிவு மற்றும் ஒட்டுமொத்த செயல்பாடு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, நிலைமல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மலர் கம்பம் ஆகிய மூன்று பிரிவுகளில், வீரர்கள் – வீராங்கனைகள் 90 நிமிடங்களில் 16 வகையான செயல் திறனை வெளிப்படுத்தியதற்கு ஏற்ப 10 புள்ளிகள் வழங்கப்படுகிறது.
அதில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்திருந்த வீரர்கள், தமிழ்நாட்டு அணியினருக்கு கடும் சவாலாக இருக்கின்றனர்.